மாநாடு 20 February 2022
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கைவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கள்ள ஒட்டு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த உரிய விளக்கத்தை மாநிலத்தேர்தல் ஆணையம் வெளியிடும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கவேண்டும். சென்னையில் வார்டு எண் 173-ல் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை வாக்குச்சாவடிக்குள் வர அனுமதிக்காமல், அப்பட்டமான விதிமீறல் செய்து கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் செயல்பட்ட தேர்தல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று (பிப் 19) மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் வாக்குப்பதிவு செய்தவர்களின் விவரங்களை (கையெழுத்து ரெஜிஸ்டர், சிசிடிவி காட்சிகள்) வேட்பாளர்களிடம் காண்பிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று (பிப் 19) மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் வாக்குப்பதிவு செய்த கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விவரங்களை பூத் வாரியாக வெளியிடவேண்டும். தமிழகமெங்கும் நடைபெற்ற ஓட்டுக்குப்பணம், பரிசுப்பொருள், உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது முறைகேடுகள் நடக்காமல் இருப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுக்கவேண்டும். கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத பட்சத்தில் நடைபெற்ற தேர்தலை ரத்துசெய்து மறுதேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அனைத்து வார்டுகளிலும் பணமும் பரிசுப் பொருட்களும் வினியோகம் ஆனது. வெளியூரில் இருக்கும் வாக்காளர்கள் பணமளித்து வரவழைக்கப்பட்டார்கள். வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள். என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் நாளில் வாக்குச்சாவடியிலேயே பணம் வினியோகம் செய்யப்பட்டது. உச்சகட்ட அநீதியாகும் வாக்குச்சாவடிகளின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. ஜனநாயகத்தைக் குழிதோண்டிப்புதைக்கும் இச்செயல்களை தேர்தல் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.தங்கள் வாக்கைப் பதிவு செய்யவந்த மாற்றுகட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை.
உள்ளாட்சிப்பதவிகளைக்கைப்பற்றி மக்கள் பணத்தை துளி விடாமல் உறிஞ்சுவிடத்துடிக்கும் கழகங்களின் ஊழல்வெறிக்கு ஜனநாயகம் பலியாகியுள்ளது.தேர்தல் அத்து மீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம்.நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் முறைகேடு நடத்திருப்பதால் வாக்குகளை எண்ணக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் முன் கருப்பு துணியால் கண்களை காட்டிக்கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கள்ள ஒட்டு பதிவானதாகவும், இதனால் மறு வாக்குப்பதிவு நடத்திட வலியுறுத்தியும் ம.நீ.ம கட்சி நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிலையில், அக்கட்சி தலைவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.