மாநாடு 27 June 2025
பேச்சுரிமை, கருத்தரிமை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை இதற்கு தடைப்போட முடியாது, உயர்நீதிமன்ற நீதிபதியான என் மீது எவ்வளவு விமர்சனத்தை, கருத்துக்களை வைக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் சென்று பாருங்கள் யாரும் நம்மை விமர்சிக்க கூடாது என்று தடை போட முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார் விவரம் பின்வருமாறு :
திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனகளுக்கு தடை செய்வது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதற்குச் சமம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் 3 நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தைத் தடை செய்ய வேண்டும். எதிர்மறையான விமர்சனங்களால் படம் தோல்வியடைந்து நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் நீதிபதிகளைப் பற்றி கூட மக்கள் எதிர்மறையான விமர்சனங்களை வழங்கும் காலத்தில் உள்ளோம் சமூக ஊடகங்களில் எப்படி தன்னை விமர்சித்திருக்கிறார்கள் என்று போய்ப் பாருங்கள் அதையெல்லாம் நம்மால் தடுக்க முடியாது. இவையெல்லாம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிரபல சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களின் தரத்தை மதிப்பாய்வு செய்வதும் “பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதி” என குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர்கள் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியாது.
தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். விமர்சனங்களை முன் கூட்டியே முடக்க முயற்சிக்கக் கூடாது மனுதாரரின் கோரிக்கையை இந்த நீதிமன்றத்தால் வழங்க முடியாது என அடிப்படை உரிமைகள் 19(1)(A) சுட்டிக்காட்டி உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.