மாநாடு 11 February 2026
தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
வீடியோ இணைப்பு 🔗 https://youtu.be/2RaBh0s6orw

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 9 நாட்களாக மறியல், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று புதன்கிழமை 9-ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது.

அதன்படி தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் அ.நாவலரசன் தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.ராஜேஸ்வரி வரவேற்றார். ஓய்வூதியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் எம்.கே. முத்துராமன், ஓய்வூதியர் சங்கம் சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் பி.மஞ்சுளா, பேராவூரணி ஒன்றியத் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.மனோகரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேராவூரணி அபர்ணா நன்றி கூறினார்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பும் போது 10 ஆண்டு பணி முடித்த தகுதி உள்ள சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் 50 சதவீதம் இருக்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியருக்கு, அகவிலைப்படி, தேசிய மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளி்ட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
Advertisement

இந்தப் போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தர்ணா போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது அதிமுக பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ தலைமையில், முன்னாள் கயிறு வாரிய தலைவர் நாடாகாடு எஸ். நீலகண்டன், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர்
கே.எஸ்.அருணாசலம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட அதிமுகவினர் அங்கு வந்து, “போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அதிமுக ஆட்சி அமைந்தால் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்” எனவும் உறுதி அளித்ததால் அங்கு சற்று பரபரப்பான சூழல் நிறைந்தது.
Video link 🔗 https://youtu.be/2RaBh0s6orw
செய்தி – பேராவூரணி நீலகண்டன்
