மாநாடு 22 March 2026
பணி செய்யவிடாமல் தடுத்ததாக, தேர்தல் பிரிவு அலுவலர் அளித்த புகாரின் பேரில், தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வீரா என்ற வீரசிங்கம் மீது வழக்கு பதிவு செய்த பேராவூரணி போலீசார் அவரை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை அன்று மாலை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதனை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த, சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலரும், வீடியோ கண்காணிப்புக் குழு அலுவலருமான ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் வீடியோ எடுக்க சென்றுள்ளனர். அப்போது உள்ளரங்க கூட்டத்தில் நடைபெறுவதை வீடியோ எடுக்கக் கூடாது என்று கூறி, தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வீரா என்ற வீரசிங்கம் தடுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து வீடியோ கண்காணிப்புக்குழு அலுவலர் ராஜ்குமார், அரசு அலுவலரான தன்னை தேர்தல் பணி செய்ய விடாமல் தடுத்ததாக அளித்த புகாரின் பேரில், பேராவூரணி காவல்துறையினர் 126/2, 132 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வீரா என்ற வீரசிங்கத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இன்று பகல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வீரா என்ற வீரசிங்கத்துக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் தற்போது பட்டுக்கோட்டை நீதிமன்றத்திற்கு வீரா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
