மாநாடு 29 April 2022
தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எழுதிய மூளைக்குள் சுற்றுலா நூல் சிறந்த நூலாக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.. இதனையொட்டி எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் ஆகியோருக்கு நாளை பரிசுத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்திருக்கிறது. இதை ஏற்க இறையன்பு மறுப்பு தெரிவித்து உள்ளார். தமிழக அரசு சார்பில் தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. அதன்படி, வெளிவந்த நூல்களில் போட்டிக்கு வரப்பெற்று தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு தமிழில் சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்கள் மற்றும் அதன் பதிப்பகத்தார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி 2018ம் ஆண்டு வரப்பெற்ற நூல்களில் சிறந்த நூலாக தலைமைச்செயலாளர் முனைவர் இறையன்பு ஐஏஎஸ் எழுதிய மூலைக்குள் சுற்றுலா என்ற நூல் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இறையன்பு தான் அரசு பொறுப்பில் இருப்பதால் தமிழக அரசின் விருதையும், பரிசுத்தொகையும் ஏற்க மறுத்து, தமிழ்வளர்ச்சித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் தனது நூலான மூளைக்குள் சுற்றுலா எனும் தலைப்பிலான நூலை சிறந்த நூலாக தேர்வுக் குழுவினர் தேர்தெடுத்து நாளை நடைபெற இருக்கும் அரசு விழாவில் பரிசு பெற அழைக்கப்பட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் தேர்வு செய்யப்பட்ட எனது படைப்பிற்கு இவ்வாண்டு நடைபெறும் விழாவில் தலைமைச்செயலாளராக பரிசு பெறுவது ஏற்புடையது முறையாகாது எனவே எனது படைப்பிற்கு வழங்கப்பெறும் பரிசை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறி உள்ளார்.
