மாநாடு 15 February 2023
நேற்று முன்தினம் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி.ஆனந்தன் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்தினார்கள். அந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமுடன் உயிருடன் இருப்பதாகவும் விரைவில் அவர் வருவார் எனவும் அவர் வெளி வருவதற்கான கால சூழல் தற்போது அமைந்திருப்பதாகவும் அறிவித்தித்தார்.
அதிலிருந்தே ஒரு சாரார் தலைவர் இருக்கிறார் என்றும், ஒரு சாரார் தலைவர் இருக்க வேண்டும் இருந்தால் மகிழ்ச்சி என்றும், பெரும்பாலானோர் இப்போது பழ.நெடுமாறன் இப்படி அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி உள்ளதாகவும், எங்களது பெருமதிப்பிற்குரியவராக திகழ்ந்த பழ.நெடுமாறன் பழைய நெடுமாறனாக இப்போது இல்லை என்றும் பல்வேறு விதங்களில் தங்களது கருத்துக்களையும், எண்ணங்களையும், விருப்பங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
அதனையொட்டி தமிழ் தேசிய தளத்தில் சரியாக களமாடி வரும் தளகருத்தர் என்று எல்லாராலும் மதிக்கப்படும் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் அதில்

பழ.நெடுமாறன், காசி. ஆனந்தன் உள்ளிட்டவர்கள் நேற்று முன்தினம் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தக்க சான்றுகள் இல்லாமல் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அறிவித்ததை ஏற்று ஏமாற வேண்டாம் என்று கீழ்க்கண்டவாறு அறிக்கை விட்டிருக்கிறார்: பெ.மணியரசன் தனது அறிக்கையில் தலைமறைவாக இருக்கும் பிரபாகரன் வெளிவந்து இயக்கத்தை தொடங்க இருப்பதாக இவர்கள் கூறியிருக்கின்ற நிலையில் பிரபாகரனின் இலட்சிய திட்டத்தை வெளியிட சொந்த அமைப்பு இல்லாமலா இருக்கும் என்ற கேள்வி எழுப்புகிறார்.
மே 18ஆம் தேதி 2009 ஆம் ஆண்டிலிருந்து நெடுமாறன் இதையே தான் குறிப்பிட்டு வருகிறார் என்றும் இதுவரை வரவில்லை என்றும் நெடுமாறன் வெளியிட்டு இருக்கிற அறிக்கையில் இந்தியாவுக்கு அதிக அளவு பிரபாகரன் விசுவாசமாக இருந்தார் என்பதை சொல்லும் வாக்கியங்களே மேலோங்கி இருக்கிறது,

எந்தவித சான்றுகளும் இல்லாமல் நெடுமாறன் அறிவித்திருப்பது நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது இது ஆபத்தான விளைவுகளை உண்டு பண்ணும், பிரபாகரன் தப்பி வாழ்கிறார் என்று நெடுமாறன் அறிவிப்பது, பிரபாகரன் மீது உள்ள நன்மதிப்பை சிதைப்பதற்கே உதவும் என்றவர் மேலும் தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் தமிழ் தேசிய உணர்வாளர்களை பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பவர்கள் என்று சிறைப்படுத்த கூடிய சூழலும் இருக்கிறது, தக்க சான்றுகள் எதுவும் இல்லாமல் பிரபாகரன் வரப்போகிறார் என்று பழ. நெடுமாறன் அறிவித்திருப்பதை ஏற்று யாரும் ஏமாற வேண்டாம் என்று தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
