மாநாடு 3 May 2022
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகள் இயங்காமல் இருந்தது அதன் காரணமாக பொதுத்தேர்வுகள் உட்பட பல தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது.
இந்த ஆண்டு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை மறுநாள் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகள் சுமார் 3,119 மையங்களில் நடைபெறுகிறது என ஏற்கனவே தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.
12ஆம் தேர்வை 8 லட்சத்து 37,317 மாணவர்களும், 11ஆம் பொதுத்தேர்வை 8 லட்சத்து 83,884 பேரும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 56,474 பேரும் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள காப்பு மையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.மின்தடை ஏற்பட்டால் மாற்று வசதி ஏற்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகேயுள்ள மின்மாற்றி பழுதடைந்தால் உடனே மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரியம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு சொன்னாலும் கூட இன்னும் சில இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு திடீரென்று நடக்கிறது அதன் காரணம் என்னவென்று தெரியாத நிலையில் தேர்வு மையங்களில் அது போல நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இவ்வாறு அறிவுறுத்தி இருப்பதை பொதுமக்கள் வரவேற்கிறார்கள்.
