மாநாடு 30 September 2022
உழைக்கும் மக்களுக்காக உறுதியாக நின்று இறுதிவரை போராடிய பி.சீனிவாசராவ் அவர்களின் 61 வது நினைவு நாளான இன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் உறுதி ஏற்பு நிகழ்வும், மலர் வணக்க நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நில உடமை ஆதிக்கங்கள், அடக்குமுறைகள் எல்லை மீறி இருந்தது. அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நடுத்தர மக்கள் முதற்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் வரை காலில் செருப்பு அணியக் கூடாது , மேல் சட்டை , துண்டு போடக்கூடாது, மேல் தட்டு மக்கள் வசிக்கும் தெருக்களில் நடந்து செல்லக்கூடாது, செருப்பு அணியக்கூடாது பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று ஏகப்பட்ட அடக்குமுறைகள் நடைமுறையில் இருந்தது.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் காலம், நேரம் பார்க்காது நாள் முழுக்க, கால் வயிற்று கஞ்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டிய நிலைமை இருந்தது.கூலி உயர்வு கேட்க முடியாது, எதிர்த்து பேசினால் சாணி பால் ,சவுக்கடி என்று கொடூரமான நிலையில் அவர்கள் அடிமையாகவே வாழ்ந்து வந்தனர்.
பண்ணை, ஜமீன் கொடுமைகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.சீனிவாசராவ் அவர்கள் இதற்கெல்லாம் முடிவு கட்ட விவசாய தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒன்று திரட்டி போராடினார். அடித்தால் திருப்பி அடி என்ற சுயமரியாதைக் கொள்கையை கற்று தந்தார். ஆசியாவிலேயே முதன் முதலாக விவசாய தொழிலாளர் சங்கம், மற்றும் விவசாய சங்கத்தை தோற்றுவித்தவர்.
அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற சமூக கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு கட்டி அவர்களின் வாழ்க்கை தரம் உயர இறுதி மூச்சு வரை பாடுபட்டவர். இவரின் 61வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் கீழ ராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி தலைமையில் நடைபெற்றது .நிகழ்வில் மூத்த தலைவர் ஜி.கிருஷ்ணன், மாநகர செயலாளர் ஆர். பிரபாகர், மாவட்ட பொருளாளர் ந.பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் துரை, ராமலிங்கம்,தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீர மோகன், ஏ ஐ டி யூ சி மாநிலச் செயலாளர் சி. சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், மாவட்ட தலைவர் வெ.சேவையா, அரசு போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன், நுகர்பொருள் வாணிப கழக சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.தியாகராஜன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் மருத்துவர் ச.சுதந்திர பாரதி ,கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளர் பி.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது அவை பின்வருமாறு: நிகழ்ச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் , இத்திட்டத்தை நகரங்கள், மாநகரங்களுக்கு விரிவு படுத்த வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கு தினந்தோறும் வழங்கப்பட்டு வரும் தினக் கூலி. 291 ரூபாயை 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும், வீடற்ற ஏழை எளிய மக்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு வீட்டுமனை ,வீடு வழங்க பெருந்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக சீனிவாச ராவ் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் என் வி. கண்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மாநிலத் துணைத் தலைவர் டி. ரவீந்திரன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். நிர்வாகிகள் பழனி ஐயாராம், கோவிந்தராஜ் , காதர் உசேன்,கரிகாலன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிவகுரு , சிஐடி யூ மாவட்ட துணை செயலாளர் கே.அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.