மாநாடு 2 May 2022
தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ளது அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. அதிகபட்ச வெப்ப நாட்கள் 28ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்த தொடங்கிவிட்டது.
வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி மார்ச் முதல் மே வரை கோடை காலம். இதன்படி தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு அளவை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.
அக்னி வெயில் காலகட்டத்தின்போது மே 11 முதல் 24-ந்தேதி வரை வெயில் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற நாட்களில் பகல் நேரங்களில் அதிக நேரம் வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் பணியின் காரணமாக வெளியில் வந்தாலும் கூட அவ்வப்போது தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்.
