வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாகவும் இந்த பாட்டு அரசின் சார்பில் நடத்தப்படும் விழாக்களில் பாடப்படும் போது கட்டாயம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் சென்ற ஆண்டு 2021டிசம்பர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசாணை வெளியிட்டார்.
அரசாணையில் தெரிவித்திருப்பதாவது 1891ம் ஆண்டு வெளிவந்த நாடக நூலான மனோன்மணியம் நூலில் தமிழ்த்தெய்வ வணக்கம் என்னும் தலைப்பில் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய பாடலின் ஒரு பகுதியை எடுத்து அதில் சில வரிகளை நீக்கி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருத்தங்கள் செய்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடலாக அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு :
நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணியம் சுந்தரனாரம் பிள்ளை எழுதிய பாடலின் இரண்டாவது பத்தியில் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துலு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை குறிப்பிடும் வரிகளை நீக்கி, கடந்த 1970-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த மு.கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார்.
அதன்படி, அப்போதிலிருந்து அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய முழுமையான பாடலை திருத்தியதை எதிர்த்து ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளரான ஜெ.மோகன்ராஜ் உயர் நீதிமன்றத்தில் 2007ல் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில் சமஸ்கிருதம் போல் அல்லாமல் இளமையாக தமிழ் மொழி இருப்பதை குறிப்பிடும் வகையிலும், பிற திராவிட மொழிகளை ஒப்பிட்டும் கூறப்பட்ட வரிகளை நீக்கியது மனோன்மனியம் சுந்தரனாரருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயல் எனவே திருத்தப்பட்ட பாடலை தமிழ் பாடப்புத்தங்களில் இடம்பெற செய்துள்ளதும் விழாக்களில் பாடுவதும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டுமென கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி அமைக்க அரசுக்கு உரிமை உள்ளதாகவும், பாடலுக்கான காப்புரிமையை மனுதாரர் பெற்றிருக்கவில்லை என்றும் தெரிவித்ததுடன், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து 1970ல் திருத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து பாடப்பட்டு வந்த நிலையில், 37 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது என கூறிய நீதிபதிகள், ஜெபமணி மோகன்ராஜின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.